சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தலில் இப்படி ஒரு பயங்கரமா

சுவிஸ் தூதரக பெண்பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நவம்பபு 25 ம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள ஆர்.பி.சேனநாயக்க மாவத்தையில் இடம்பெற்றதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனசண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த பகுதியிலேயே அவுஸ்திரேலிய, ஜப்பானிய தூதரகங்களும் அமைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த பெண், இவர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் குடியேற்ற விவகாரங்களிற்கு பொறுப்பான சுவிட்சர்லாந்தை சேர்ந்த அதிகாரியின் உதவியாளராக பணியாற்றினார் எனவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களிற்காக பெயர் விபரங்களை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ், குறிப்பிட்ட பெண் பணியாளர் அருகிலுள்ள பாடசாலை கட்டிடத்திலிருந்து வெளியேறிய வேளை ஐந்துபேர் வெள்ளை நிற டொயோட்டா கொரலா காரில் அவரை பின்தொடர்ந்தனர் எனவும் தெரிவித்துள்ளது.

அவர்கள் தூதரக பணியாளர்களை தங்கள் காரிற்குள் பலவந்தமாக ஏற்றிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். இரண்டு மணிநேரத்தின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார் என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பெண் பணியாளர் பாலியல்ரீதியில் தான் துன்புறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தார், அவரை கடத்தியவர்கள் கையை பிணைத்த பின்னர் கண்ணை கறுப்பு துணியால் கட்டியுள்ளனர் என சம்பவம் குறித்த விபரங்களை அறிந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் பெண் பணியாளரை கடத்தியவர்கள் அவர் ஏன் சிஐடி அதிகாரி நிசாந்த சில்வாவிற்கு உதவினார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவரிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய அவர்கள் பதிலளிக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அச்சுறுத்தினார்கள் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.