சுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழ் இளைஞர் பரிதாப மரணம்

புலம் பெயர் தேசங்களில் தொடர்ச்சியாக தமிழ் இளைஞர்கள் அகால மரணமடைவது தமிழ் மக்களிடையே வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர், வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள், சிறுவயதில் பெற்றோர்களை பிரிந்து தனித்துச் செல்லும் இளைஞர்கள் இவ்வாறு இன்னுமொரு தேசத்தில் மரணமடைவது பெற்றவர்களுக்கும் சொந்த நாட்டவர்களுக்கும் பெரும் துன்பத்தைக் கொடுக்கும் நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு புலம்பெயர் தேசங்களில் அண்மைக்காலங்களாக அகால மரணச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 11 ஆம் மாதம் 24 ஆம் திகதியும் சுவிஸ் நாட்டில் மட்டக்களப்பு பெரிய கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மரணமடைந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆற்றங்கரையில் குறித்த இளைஞர் மரணமடைந்தது அனைவரையும் துயரில் ஆழ்த்தியது. மட்டக்களப்பு பெரியகல்லாறைச் சேர்ந்த சுலக்சன் என்ற இளைஞர் மரணமடைந்த செய்தி உலகத் தமிழர்களுக்கு துக்கமான செய்தியாக மாறியது.

இதுபோன்று புலம் பெயர் தேசங்களில் அதிகளவான மரணச் செய்திகளை கேட்டு இருக்கிறோம். இதேவேளை, சுவிஸில் அதுவும் ஆற்றங்கரைப் பகுதிகளில் இந்த ஆண்டில் இது போன்ற மரணச் செய்திகள் வந்திருக்கின்றன.

இது தொடர்பில் அதிகளவில் ஏன் கவனம் செலுத்தப்படுவதில்லை. நாடுவிட்டு நாடு சென்றவர்கள் அங்கே அகால மரணமடைவது தொடர்பில் அங்கிருக்கும் சகோதரர்கள் விழிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான இறப்புக்கு காரணங்கள் என்ன? ஏன் இளைஞர்களை தொடர்ந்தும் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தொடர்பில் ஆராய்ந்து இனிவரும் இழப்புக்களை தடுக்க வேண்டும் என்று சமூக நலன்விரும்பிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்கள்.

அத்துடன் இம் மரணம் தொடர்பில் சுவிட்சர்லாந்து பொலிசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞனின் இறுதிக் கிரிகைகள் இன்றைய தினம் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.