எனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படவில்லை! முத்தையா முரளிதரன்

தனக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் போலியானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் போலியான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. நான் ஒரு விளையாட்டு வீரன். அரசியல்வாதி அல்ல. நான் எனது அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவி வருகின்றேன.

இந்த அறக்கட்ளை மூலம் பலருக்கு தன்னால் உதவ முடியும். இந்நிலையில், தனக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் போலியானது.

இதனிடையே, தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை தொடர அனுமதிக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரிக்கிறேன், ஏனென்றால் அவர் நாட்டை வழிநடத்த சரியான நபர். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு நிர்வாகி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்.

அவர் ஒரு புத்திசாலி, அவர் சீர்திருத்தங்களைச் செய்வார், அபிவிருத்தி பாதையில் செல்வார், வாழ்க்கையை மேம்படுத்துவார், சரியானதைச் செய்வார்” என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.