வெள்ளை வான் படுகொலை தொடர்பில் ராஜித பகிரங்க அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச இருந்தவேளை வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு முதலைக்கு உணவாகப் போடப்பட்டமை தொடர்பில் என்னிடம் எந்தத் தரப்பும் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

அந்த விசாரணைகளை எந்த நேரமும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இரு நபர்களுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இதன்போது ராஜிதவுடன் வந்தவர்களில் ஒருவர், தான் வெள்ளை வான் சாரதியாகப் பணியாற்றினேன் எனவும், வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டு முதலைக்கு உணவாகப் போடப்பட்டார்கள் எனவும் கூறி இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராஜித சேனாரத்ன, வெள்ளை வான் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதென கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துக் கூறும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவேளை வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் முதலைக்கு உணவாகப் போடப்பட்டமை தொடர்பில் வெள்ளை வான் ஒன்றின் சாரதி ஒருவர், எனது தலைமையிலான ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அவர் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

எனவே, எனது தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் எந்தத் தரப்பும் என்னிடம் விசாரணைகளை மேற்கொள்ளலாம். விசாரணைகளுக்கு அஞ்சி நாட்டை விட்டுத் தப்பியோடி ஒளிந்து கொள்பவன் நான் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.