அமைச்சர்களின் நியமனங்களை இரத்து செய்த ஜனாதிபதி

அரச சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் தீர்மானங்களை மீறி, அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமித்த சில அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளதுடன் அந்த நியமனங்களை உடனடியாக இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, மின்சார சபை, இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை விமான நிறுவனம் ஆகிய சில அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ள ஜனாதிபதி, நிபுணத்துவ குழுவின் தீர்மானத்தை மீறி செயற்பட வேண்டாம் என அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரச நிறுவனங்களை முன்னேற்ற தகுதியான நபர்களை தெரிவு செய்ய விளம்பரம் வெளியிட்டுள்ளதாகவும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர்களில் தகுதியானவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருக்கும் எவரையும் அரச நிறுவனங்களின் பதவிக்கு பரிந்துரைக்க வேண்டாம் என கூறியுள்ள ஜனாதிபதி, அப்படியான நபர்களை நியமிக்கும் போது அவர்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தை விட தேர்தலை இலக்காக கொண்டு செயற்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் தலைவராக நியமித்த புகழ்மிக்க நபரின் பெயர் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதால், அவரை நீக்கினால், அவருக்கு பெரும் அவமரியாதை ஏற்படும் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ள போதிலும் “ எதுவும் செய்ய முடியாது நான் கூறுவதை செய்யுங்கள்” என ஜனாதிபதி அந்த அமைச்சரிடம் கடுமையாக தெரிவித்துள்ளார்.