யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த அதிரடிப்படையினர்! வேடிக்கை பார்த்த நிர்வாகம்- மாணவர்கள் குழப்பம்

சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் மாணவர்களை அச்சுறுத்திய செயற்பாடு நடந்த போதும் பல்கலைக்கழக நிர்வாகம் வேடிக்கை பார்த்ததுடன், அவர்களை உள்ளேவிட்டு பிரதான வாயிலையும் மூட மறுத்தனர் எனத் தெரிவித்து மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக வாயிலில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. சிறப்பு அதிரடிப்படையினர் 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களிலும் பொலிஸார் இருவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரை சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸார் துரத்தி வந்தனர். இளைஞர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் ஆயுதங்களுடன் அவர்களை வளாகத்துக்குள் துரத்திச் சென்றனர்.

எனினும் துரத்தி வந்த இளைஞர்களைக் கண்டறியவதில் சிக்கல் ஏற்பட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு கலை நிகழ்வுகளுக்காக நின்றிருந்த மாணவர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அத்துமீறி பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்களுடன் சிறப்பு அதிரடிப்படையினர் நுழைந்தனர் எனவும் அவர்கள் வெளியேறாத வகையில் பிரதான வாயிலை மூடுமாறும் மாணவர்கள் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

பிரதான வாயில் மூடப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர். இதனால் தம்மை அச்சுறுத்திய சிறப்பு அதிரடிப் படையினரை வெளியேற அனுமதித்ததாகவும் அத்துமீறி நுழைந்த சிறப்பு அதிரடிப் படையினர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெருமளவு மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் கூடியுள்ளனர்.

இதேவேளை, தாம் துரத்திவந்த சந்தேகநபர்கள் இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் தெரிவிக்கும் பொலிஸார், அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தி வந்தததால் துரத்திச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

எனினும் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் வாகனத்தைச் செலுத்தி வந்தவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்ததால் இப்பிரச்சினை ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.