பிரியங்க பெர்னான்டோ விவகாரம் ஐ.நா.வில் இலங்கையை சிக்கவைக்கும் சூழ்ச்சி

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பிரச்சினை மற்றும் பிரியங்க பெர்னான்டோ விவகாரங்கள் என்பன ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கையை சிக்கவைக்கும் பின்னணி என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி. இ. டபிள்யூ. குணசேகர தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் இலங்கை பிரஜை. அதனால் எமது பாதுகாப்பு பிரிவுக்கு அவரிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு அதிகாரம் இருக்கின்றது.

இருந்தபோதும் குறித்த பெண்ணை தூதரகத்துக்குள் வைத்துக்கொண்டு கடந்த இரண்டு வாரங்களாக வாக்குமூலம் வழங்காமல் சாட்டு தெரிவித்து வந்தனர். என்றாலும் தற்போது அவர் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார்.

ஆனால் லண்டன் உயர் ஸ்தானிகர் காரியாளயத்தில் சேவையில் இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இராஜதந்திர அதிகாரம் பெற்றவர். அவருக்கு எதிராக வழங்கு தொடர அந்நாட்டு அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இருந்தபோதும் நாங்கள் இரு நாடுகளின் உறவில் விரிசல்கள் ஏற்படாதவகையில் எமது நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் வெளிவிவகார அமைச்சு செயற்பட்டு வருவதாக” டி. இ. டபிள்யூ. குணசேகர சுட்டிக்காட்டினார்.