தானம்செய்த உடலுறுப்பு விற்பனை

சேலம் அருகே உடல் உறுப்புகள் தானத்திற்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, உறுப்புகள் தானம் செய்த குடும்பத்தாரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.

ஓமலூர் அருகேயுள்ள நரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன். அவர் கடந்த 25-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது, சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். ஓமலூர், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, சீரங்கன் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

சேலம் தனியார் மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, இரண்டு நபர்களுக்கு பொருத்தப்பட்டது. இந்தநிலையில் தனியார் மருத்துவமனைக்கு உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது சீரங்கன் மனைவி கனகா, தாங்கள் செய்த தியாகத்தை சிலர் கொச்சைபடுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.