மகள் காதலனை கொன்ற தந்தை

மதுரை சிம்மக்கல் அருகே மகளின் காதல் பிடிக்காததால் காதலனை பெண்ணின் தந்தை கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை சிம்மக்கல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகள் சத்யாவை காதலித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சாமிமிநாதன், தனது மகளைக் காதலிக்கக் கூடாது என அஜித்தை மிரட்டி உள்ளார். ஆனால் இரு வீட்டினருக்கும் தெரியாமல் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், தனது நண்பர் விஜய் உடன் இணைந்து அஜித்தை கொலை செய்ய சாமிநாதன் திட்டம் தீட்டியுள்ளார்.

சாமிநாதனிடம் பேசி அவரின் மகளை திருமணம் செய்து வைப்பதாக விஜய் கூறிய ஆசை வார்த்தையைக் கேட்டு அஜித்தும் அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பாதி வழியில், சாமிநாதனும் அந்த இரு சக்கரவாகனத்தில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அஜித்தை சாமிநாதன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர், அஜித்தின் உடலை வைகை ஆற்றங்கரையில் வீசிவிட்டு இருவரும் தப்பியோடினர். சாமிநாதனையும் அவரது கூட்டாளி விஜயையும் போலீசார் கைது செய்துள்ளனர். அஜித்தின் வருமானத்திலேயே குடும்ப வரவு செலவுகளை நடத்தி வந்த தாயும், தம்பியும் தற்போது செய்வதறியாது தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.