வேலைக்குச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லை: மனைவி பொலிஸில் முறைப்பாடு

மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கணவரான நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் நிமால் என்பவரே காணாமல் போயுள்ளதாக மனைவி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த அன்ரனிஸ் நிமால் குறித்த குடும்பஸ்தர் கடந்த சனிக்கிழமை காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.

இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.

எனினும் 2 நாட்கள் கடந்தும் இதுவரை குறித்த நபர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, எவர் மீதும் சந்தேகம் கொள்ளும் படியான சம்பவங்கள் நடை பெறவில்லை. குடும்பப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் உள்ளூர் பொலிஸ் நிலையங்களுக்கு குறித்த நபர் தொடர்பான தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அவரை தேடி வருவதாக முருங்கன் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.