ஸ்ரீலங்காவில் திருமணச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கோடு திருமண திருச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷிதா விஜயமான்ன தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருத்த சட்டமூலத்திற்கு அமைய இந்த திருத்த சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளார்.
இந்த திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எந்த இன, மதத்தவராக இருந்தாலும் ஆகக்குறைந்த திருமணமாகும் வயதெல்லை 18 ஆகும். இந்த வயதெல்லையை தாண்டாத எவருக்கும் திருமணம் செய்வதோ அல்லது செய்து வைப்பதோ சட்டதிற்கு முரணான செயலாகும்.
எனவே அவ்வாறான திருமணங்கள் இனிவரும் காலங்களில் செல்லுபடியற்றதாக கருதப்படும். குறித்த வயதெல்லையை தாண்டாத எவரையும் திருமண பந்தத்தில் இணையவோ, அதற்கு உதவிபுரியவோ அல்லது கட்டாயப்படுத்துபவர்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படும் திருமணங்கள் அனைத்தும் செல்லுபடியற்றவை என கருதப்படும்.
இதேவேளை, கந்த உடரட்ட திருமணம் (மத்திய மலை நாட்டு திருமணம் ) மற்றும் முஸ்லிம் மக்கள் இஸ்லாம் சட்டதிற்கு அமைய செய்யும் திருமணம் உள்ளிட்ட அனைத்து திருமணங்களும் இந்த சட்டத்திற்கு கட்டுப்படும்.
இவற்றை மீறி திருமணம் செய்து வைக்கப்படுமாயின் அதுகுறித்து அதிக பட்ச சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






