யாழ்.பருத்தித்துறையில் இரு தரப்பினர்களுக்கிடையே கடும் மோதல்… இராணுவத்தினர் குவிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையில் இரு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதல் மாறியுள்ளது. இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து நொருக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டதால் அப் பிரதேசமே போர்க்களமாக மாறியது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்திருந்த போதும் மோதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தொடர்ந்தும் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் நீடித்ததால் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இதன் பின்னர் மோதல் சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆயினும் இச்சம்பவத்தின் போது பலரும் காயமடைந்ததுடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து காயமடைந்த ஐந்து பேர் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அங்கு பெருமளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.