நொச்சியாகமயில் விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 44 பேர் கைது! (Video)


நொச்சியாகம – தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பொலிஸார் நால்வர் காயமடைந்துள்ளனர்.

அமைதியின்மை ஏற்படக் காரணமாகவிருந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் அடங்கலாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தம்புத்தேகம பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ராஜாங்கனை ஆற்று நீரை விவசாயத் தேவைக்குப் பயன்படுத்தும் விவசாயிகள் சிலர் இன்று முற்பகல் கலாஓய பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் தம்புத்தேகம பொலிஸ் நிலையம் முன்பாகக் கூடி மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜாங்கனை ஆற்று நீரை குடிநீர் செயற்திட்டமொன்றுக்கு பயன்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.