நபர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் பேசாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர் ஒருவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பேசாலையைச் சேர்ந்த குறித்த அரச ஊழியர் அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நேற்று இரவு தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து பேசாலை பொலிஸார், தாக்குதலை மேற்கொண்ட அக்கிராமத்தைச் சேர்ந்த அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியரான சந்தேக நபரை கைது செய்து இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது தாக்குதல்களுக்கு உள்ளான நபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் குறித்த அரச ஊழியரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







