சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களிற்கு வருகிறது மாற்று நடவடிக்கை

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் போது வைத்திய அறிக்கையை நெருக்கடியின்றி பெற்றுக் கொள்வதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வகையில் குறித்த வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழை போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ளும் போது பல்வேறு நெருக்கடிக்களை பொது மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

இதனை தவிர்ப்பதற்கு தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு போக்குவரத்து முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலானோர் கொழும்புக்கு அப்பால் வெளி இடங்களில் இருந்து வருகை தருகின்றனர்.

இவர்களின் வசதிக்காக இந்த பிரதேச அலுவலகங்கள் மூன்றை புதிதாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, பண்டாரவளை, நுவரெலிய பிரதேசங்களில் உள்ள மக்களின் வசதிக்காக அலுவலகம் ஒன்றும், அவிசாவளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் போன்று வட மத்திய மாகாண மக்களுக்காக துணை அலுவலகம் ஒன்றும் தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேபோன்று வடமேல், கம்பஹா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள பிரதேச மக்களுக்காக நீர்கொழும்பில் துணை அலுவலகம் ஒன்றையும் அமைப்பதற்கு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அமரவீர இந்த அலுவலகங்களை அமைப்பதற்கான பணிகளை துரிதமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை வாகன அனுமதி பத்திரத்தை அச்சிட்டு வெளியிடக்கூடிய வசதிகளை கொண்ட அலுவலகம் ஒன்றை அநுராதபுரத்தில் அமைப்பதற்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகை பணத்தையும் காலத்தையும் செலவிட்டு வெளிமாவட்ட மக்கள் கொழும்புக்கு வருவதை இதன் மூலம் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.