சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்!

சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றை அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கையளித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 72ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் சிங்களமொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு கிடையாது எனவும் தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அடையாளம் என்பதுடன் வெவ்வேறு இனங்களை ஒன்றிணைக்கின்றதாக அமையும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.