சொந்த மக்களின் நம்பிக்கையை வெல்வது முக்கியமில்லை ஏனைய மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி வெல்லவேண்டும்! – நாடாளுமன்றில் சுமந்திரன் எம்பி

ஒருநாட்டின் செல்வாக்குமிக்க தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலிலே அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா என்பது முக்கியமானது அல்ல. மாறாக ஏனைய இன மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கத் தயாராக உள்ளார்களா என்பதே முக்கியமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை அமர்வை கடந்த 3ஆம் திகதி ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று (ஜன.7) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன அறிக்கையானது கடந்த ஜனவரி மூன்றாம் திகதி அன்று முன்வைக்கப்பட்டது. இக்கொள்கை பிரகடனமானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி புரிந்த அரசுகளின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளை கொண்டிருப்பதினால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஜனாதிபதி கடந்த நவம்பர் 16 அன்று மிகமுக்கியமான வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்தப் பெருவெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களை தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதியில் நம்பிக்கை வைப்பதற்குத் தயாராக இல்லை என்பதாகும்.

இதை எவ்விதத்திலும் ஜனாதிபதி மீது அவதூறு கொண்டுவரும் நோக்கில் நான் கூறவில்லை மாறாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்கவேண்டுமன்பதில் கரிசனையாக இருந்தால், இத்தகைய ஒரு முக்கியமான அம்சத்தினை நாம் புறக்கணிக்க முடியாது என்பதனை சுட்டிக்காட்டவே இந்தக் கருத்தினை முன்வைக்கின்றேன்.

ஒரு நாட்டின் செல்வாக்குமிக்க தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்விலே அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா என்பது முக்கியமானது அல்ல. மாறாக ஏனைய மக்கள் அவரில் நம்பிக்கை வைக்க தயாராக உள்ளார்களா என்பதே முக்கியமாகும்.

துரதிஷ்டவசமாக இது இன்னும் நடைபெறாத ஒன்றாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதி தனது வெற்றிக்கு பின் வெளியிட்ட இரண்டு கருத்துக்களில் இந்த விடயம் தொடர்பில் தாம் தெளிவான விளக்கத்தோடேயே உள்ளார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

ருவன்வெலிசாயவில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி இதனை கூறியிருந்த அதேவேளை மிகத்தெளிவாக தான் முழுநாட்டிற்கும் ஜனாதிபதி என்றும், தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் தானே ஜனாதிபதி என்பதனையும் சேர்த்தே கூறியிருந்தார்.

எமது நாடானது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், சமயங்கள், இனங்கள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மக்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதி இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

இந்த ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்திலே தங்கியிருக்கவில்லை. ஜனநாயகமானது தப்பிப்பிழைக்கவும், செழிப்படையவும் வேண்டுமேயன்றி வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கிச் செல்லாமல் இருக்க வேண்டுமென்றால், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் கவலைக்கிடமாக ஜனவரி மூன்றாம் திகதி 2020, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அத்தகைய பின்னடைவான ஒரு நிலைப்பாட்டினை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்கள்.

பிரச்சனை உருவாவதற்கு வழிசமைத்து அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து மூன்று தசாப்தங்களாக பல தீமைகளைக் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்த எமது நாட்டின் தலைவர்களின் பின்னடைவான சிந்தனைக்கு ஒத்த சிந்தனையாக அது அமைந்திருந்தது.

எமது கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி அல்லது “பெடரல் கட்சி” என அறியப்பட்ட கட்சி குடியுரிமை சட்டத்தின் விளைவாக பிறந்த ஒரு கட்சியாகும். இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் ஆனது முதலாவது நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களை கொண்டிருந்த கிட்டத்தட்ட 8 லட்சம் மக்களின் வாக்குரிமையை ரத்து செய்தது. பெரும்பான்மையினரின் விருப்பம் என்ற பெயரிலேயே ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை இது பறித்தது.

மேலும் அவர்களுடைய குடியுரிமையையும் அதை இல்லாமல் செய்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் பேரினவாத செயற்பாடு காரணமாகவே இலங்கை தமிழரசுக் கட்சி எனும் இன அடிப்படையிலான ஒரு கட்சி உருவாவதற்கான தேவை உண்டாகியது என்பதனை இந்தநாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1956 ஆம் ஆண்டு அரச மொழிகள் சட்டமானது சிங்களமொழியினை மாத்திரம் அரசகரும மொழியாக ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த பேரினவாதம் மேலும் புலப்படும் வகையில் உருப்பெற்றதை நாம் கண்டோம். நமது தலைவர்கள் அமைதியான முறையிலே காலி முகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட பொழுது தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அது பின்னர் தொடர்ச்சியான படுகொலைகளாக மாறியது.

முதலாவது குடியரசு யாப்பு வரையப்பட்ட பொழுது மொழிகள் தொடர்பில் இருந்த அநீதியை திருத்துவதற்கு எமது கட்சி முயற்சி செய்தது. ஜே.ஏ.எல். குரே இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக சட்டங்கள் இன்னும் தனது என்னும் தனது ஆய்வுக் கட்டுரையின் 81ஆவது பக்கத்திலே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“அரசியலமைப்பு சபையானது 1971ம் ஆண்டு ஜூன் 28ம் திகதி மொழி தொடர்பிலான சட்டத்தினை 88 வாக்குகளினால் நிறைவேற்றியது (10 அங்கத்தவர்கள் வாக்களிக்கவில்லை), அச்சட்டமானது பின்வருமாறு அமைந்திருந்ததது, அனைத்து சட்டங்களும் சிங்கள மொழியில் இயற்றப்பட்ட வேண்டும், அவ்வாறு இயற்றப்படுகின்ற ஒவ்வொரு சட்டத்திற்கும் தமிழாக்கம் இருத்தல் வேண்டும்”
பெடரல் கட்சி பின்வரும் திருத்தங்களை முன்மொழிந்திருந்தது.

சிங்களமும் தமிழும்

அ). சட்டங்கள் இயற்றப்படும் மொழிகளாக இருத்தல் வேண்டும்

ஆ). அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும்

இ). நீதிமன்றங்களின் மொழிகளாக இருத்தல் வேண்டும்

ஈ ). அனைத்து சட்டங்களும் வெளியிடப்படும் மொழிகளாக இருத்தல் வேண்டும்.

இந்த மும்மொழிவுகள் அனைத்தும் 88 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. இவற்றிக்கு ஆதரவாக 13 வாக்குகள் கிடைத்தன. இந்த திருத்தங்களின் விவாதங்களின் பின்னர் பெடரல் கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சபையில் உரையாற்றியிருந்தார்.

அந்த உரையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பிலே தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமை திருப்பிதிகரமாக அமையவில்லை என்பதினாலே இந்த சபையின் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது நன்மையளிக்காத விடயமாகும் என்றும், அன்றைய தினம் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்ற வேளைக்கு பின்னர் தாம் சபைக்கு சமூகமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.

எமது கட்சியின் முயற்சிகள் வீண்போன அதேநேரம்,பேரினவாத அரசியலமைப்பு சட்டம் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 1978ம் ஆண்டு இரண்டாவது குடியரசுயாப்பு உருவாக்கப்பட்டபோதும் நடைபெற்றது. இதன்பிற்பாடே ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்கள் பெருவாரியாக கொலை செய்யப்பட்ட 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை சம்பவங்கள் இடம்பெற்றது.

இதன்போது இந்தியா தனது அலுவலகங்களூடாக இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதற்கமைய இங்கு அனுப்பி, தமிழர்களிற்கு வரலாற்று ரீதியாக நடந்த அநீதிகளை சரி செய்ய முன்வந்தது.

1987ம் ஆண்டு நாட்டிலுள்ள மக்களின் பன்முகத்தன்மையினை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பினை சீர்திருத்துகின்ற சரியான திசையில் நாடு பயணிக்க ஆரம்பித்தது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களும் தமது பிராந்தியங்களில் நிர்வாகத்தினை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்களை கொண்ட மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது. சிங்கள மொழியோடுகூட தமிழும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நடவடிக்கைகள் நாங்கள் விலக்கிவைக்கப்பட்டிருந்த தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இணைய வழிவகுத்தது. தொடர்ந்து வந்த அரசுகள் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஓகஸ்ட் 2000 அரசியலமைப்புப் பத்திரம், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சர்வ கட்சி அங்கத்தவர் குழுவின் நடவடிக்கைகள் போன்றன இவற்றுள் உள்ளடங்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின்போது, போர் முடிவடைந்ததும் இந்தியா உள்பட சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை அரசியல் ரீதியாக அதிகாரப்பரவலாக்கத்தின் ஊடாக தீர்க்கப்படும் என்ற உறுதியை ஜனாதிபதி ராஜபக்சவின் அரசு வழங்கியிருந்தது.

இந்த உறுதிமொழி குறைந்தது மூன்று தடவை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அதிலே 13வது திருத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை அடையும் நோக்கில் 13வது திருத்தச்சட்டம் மேலும் கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

13வது திருத்தச்சட்டத்தின் முழுமையான நடைமுறையாக்கம் என்பது தேசிய மொழியான தமிழ் மொழியின் முழுமையான நடைமுறையாக்கத்தினையும் உள்ளடக்குகின்றது.

2015ம் ஆண்டு சிறிசேன விக்கிரமசிங்க அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2016ம் ஆண்டு மார்ச் நாடாளுமன்றத்தினை அரசியல் சாசன சபையாக மாற்றும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உள்ளடங்கலான அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதலோடு வழிகாட்டல் குழு மற்றும் ஏனைய உப குழுக்கள் இது தொடர்பில் அநேக காரியங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்த நாட்டின் நன்மையைக் குறிக்கோளாக கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணும் நோக்கில் இந்த நடவடிக்கைகளில் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தோம். எமது மக்கள் அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையினையையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட இன்னமும் தயாராக இருக்கிறார்கள். அதனடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்கின்ற ஜனாதிபதியின் கருத்தோடு நாம் உடன்படுகின்றோம்.

சுதந்திரமடைந்ததன் பிற்பாடு எமது சமூகத்தின் பன்முகத்தைமையினை அர்த்தமுள்ளவகையில் அங்கீகரிக்க முடியாமல் இருந்த பின்னணியினை கடந்த 30 வருடங்களில் நாம் எடுத்து வரும் பல்வேறு சாதகமான நடவடிக்கைகளால் மாற்ற முயன்று வருகின்றோம். நாம் இன்னும் பயணிக்க வேண்டியிருக்கின்றது. இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்றால் நாம் அதே நோக்கில் பயணிக்க வேண்டும். மாறாக அந்த பாதையில் இருந்து விலகும் எத்தகைய நடவடிக்கையும் எம் அனைவரையும் பெரும் அழிவிற்கே இட்டுச் செல்லும்.

இந்த அரசுக்குச் சார்பாக செயற்படும் அநேகர் சிங்கப்பூரானது எவ்வாறு தம் மக்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தினையும் செழிப்பினையும் அடைந்துள்ளது என கூறுவதனை அவதானித்துள்ளேன். நாம் விரும்புவதை மாத்திரம் பொறுக்கிக் கொள்ளாமல் இருப்போமேயாகில் சிங்கப்பூர் ஒரு நல்ல உதாரணம்.

சிங்கப்பூர் நான்கு தேசிய மொழிகளை கொண்ட நாடு, அவர்களின் தேசிய கீதமானது மொத்த சனத்தொகையில் 15% மாத்திரம் கொண்ட மலே மக்களின் மொழியில் இசைக்கப்படுகிறது. நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ வின் அறிவுரைக்கு செவிமடுப்பது சாலத்தகுந்தது என கருதுகிறேன்.

“பிரித்தானியாவின் மாதிரி பொதுநலவாய நாடு சிலோன் ஆகும். சுதந்திரத்தினை நோக்கி மிக அவதானமாக தயார்படுத்தப்பட்ட ஒரு நாடாகும். போரின் பின்னர் 10 மில்லியனிற்கும் சற்று குறைவான மக்களை கொண்ட ஒரு நடுத்தரளவிலான நாடாகும், 1948ல் சிலோன் சுதந்திரம் பெற்ற போது சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக துல்லியமான ஒரு மாதிரியாக அது விளங்கியது. ஆனால் அது அவ்வாறு செயற்படவில்லை. ஒரு வளமிக்க நாடு வீணாய் போய்க்கொண்டிருப்பதனை எனது பயணங்களின் போது நான் கண்டேன்.

ஒரு மனிதன், ஒரு வாக்கினால் ஒரு அடிப்படை பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. 8 மில்லியன் சிங்கள மக்கள் 2 மில்லியன் தமிழ் மக்களை தேசிய மொழியான ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மாறும்படிக்கு வாக்குகளினாலே தோற்க்கடித்தார்கள். இது தமிழ் மக்களிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. எந்தவொரு அரச மதமும் இல்லாமல் இருந்த ஒரு நாட்டிலே சிங்களவர்கள் பௌத்த மதத்தினை தேசிய மதமாக மாற்றினார்கள். இதனால் தமிழர்களும் இந்துக்களும் நிராகரிக்கப்பட்டதனை உணர்ந்தார்கள் – என்றார்.