ஏவுகணை தாக்குதலில் விபத்துக்குள்ளான உக்ரைன் நாட்டு விமானம்! வெளியாகியுள்ள காணொளி

ஈரானில் விபத்துக்கு உள்ளான உக்ரைன் நாட்டு விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. அண்மையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதனிடையே உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.

குறித்த விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இதனை ஈரான் மறுத்துள்ளது.

இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஈரான் செலுத்திய ஏவுகணை தாக்கியதாலேயே குறித்த விமானம் விபத்துக்குள்ளனதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த காணொளி தொடர்பில், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சோதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.