கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட காதலி: இளைஞர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரி!

காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அசால்ட்டாக பொலிஸ் நிலையம் சென்று காதலன் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான முனிகலா ஹரதி மற்றும் முகமது ஷாஹித் (25) ஆகியோர் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

ஷாஹித் அடிக்கடி ஹரதியின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதற்கிடையில் இவர்களுடைய நட்பு காதலாக மாறியிருக்கிறது. ஆனால் இந்த விவகாரம் ஹரதியின் வீட்டிற்கு தெரியாததால், வெளியில் மணமகன் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ஹரதியிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி தன்னுடைய அறைக்கு வருமாறு ஷாஹித் கூறியுள்ளார். வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி ஹரதியும் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

ஷாஹித் தனியாக வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த ஷாஹித், பிளேடால் ஹரதியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளான்.

4 கிமீ தூரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு சென்றதும் அங்கிருந்த அதிகாரிகளை சந்திக்க முயற்சித்துள்ளான். ஆனால் வாயிற்காவலில் நின்ற பொலிஸார், நேரம் முடிந்துவிட்டது என நாளை வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு ஷாஹித், நான் ஒரு கொலை செய்துவிட்டு வந்துள்ளேன் என கூறியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பொலிஸார், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பின்னர் ஷாஹித் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஹரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரதி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்ததாலே கொலை செய்தேன் என ஷாஹித் பொலிஸாரிடம் கூறியுள்ளான்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த ஹரதியின் பெற்றோர், இருவரும் காதலித்து வந்தது தங்களுக்கு தெரியாது எனக்கூறியுள்ளனர். அவர்கள் காதலிப்பது தெரிந்திருந்தால் நாங்கள் நிச்சயமாக திருமணம் செய்துவைத்திருப்போம் என அழுது துடித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.