சாலையின் நடந்து சென்றவர்களின் மீது திடீரென விழுந்த பை: வெந்துபோன சிறுமியின் முகம்!

ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே வீசிய ஆசிட் பாட்டில் அடங்கிய பை, சிறுமியின் முகத்தில் பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார்.

லக்னோவின் காசியாரி மண்டி பகுதியை சேர்ந்த ஆஷா சோங்கர் என அடையாளம் காணப்பட்ட பெண் சனிக்கிழமையன்று, தனது வீட்டிற்கு வந்த நகைகளை சுத்தம் செய்யும் ராம் சந்திர சோனி என்பவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த ஆஷா அவருடைய பையை பறித்து வீட்டிற்கு வெளியே வீசியெறிந்துள்ளார். அந்த சமயத்தில் 14 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளனர்.

ஆஷா வீசியெறிந்த பையில் ஆசிட் பாட்டில் இருந்ததால் சிறுமியின் மேல் பட்டு வெடித்து சிதறியுள்ளது. இதில் இரண்டு பெண்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அதே நேரத்தில் சிறுமியின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பலத்த காயமடைந்த சிறுமி தற்போது சிகிச்சைக்காக பால்ராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் ஆஷாவை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சிறுமிக்கும் இடையே பகை இருந்ததா என்கிற கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.