யாழ் நகரில் பறந்த பௌத்தகொடி! விசமிகள் கைவரிசை

யாழ் நகரின் மத்திய பகுதியில் விசமிகள் சிலரால் பௌத்த மதத்தை குறிக்கும் கொடி நடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் குறித்த கொடி நிறுவப்பட்டுள்ளது.

வேறிடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களை மேடையாக்கி, இரும்புக் கம்பியில் அக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அத்துடம் கொடியின் கீழ் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை பூட்டிய போது இது இருக்கவில்லையென்றும், இன்று காலையில் வந்தபோது குறித்த கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அப்பகௌதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் தெரிவிக்கையில்,

சிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்ற நிலையில், அதனை தடுத்து நிறுத்தி நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும் என குறிப்பிடுள்ளார்.

அத்துடன் நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோவின் கருத்துப்படி சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ்த்தேசத்து நிலங்களினை இவ் வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்தமயமாக்கலுக்கு உட்படுத்தி அதனை பறித்தெடுகின்ற செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்துகூறுகின்ற நினைவுச் சின்னங்களை, எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் எனவும் கூறியுள்ளார்.