1000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு! கோட்டாபயவின் அதிரடி உத்தரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவா அமைய வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும். இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உற்பத்தி மற்றும் கைத்தொழிற் துறை அடையும் முன்னேற்றத்துடன் இணைந்ததாக அதன் நன்மைகள் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.