குளத்தில் குளித்துக்கொண்டிருந்த தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!

புத்தளம் வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே இன்று செவ்வாய்க்கிழமை (14) மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

வி.சந்திரகுமாரி ( வயது 36), அவரது மகன் ஆர்.கிருஷ்ணகுமார் (வயது 17), அவரது மகள் ஆர்.சுபாஷினி (வயது 19) ஆகிய மூவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தாயும் , இரண்டு பிள்ளைகளும் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து தோட்டமொன்றை பராமரிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்னரே புத்தளம் வன்னாத்தவில்லு பகுதிக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மாலை 4.30 மணி அளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வண்ணாத்திவில்லு – இறால்மடு குளத்தில் நீராடச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாயின் ஏழு வயது பெண் குழந்தை நீராடாமல் குளத்திற்கு அருகில் இருந்துள்ளதுடன், ஏனைய மூவரும் குளத்தில் நீராடுவதற்காக சென்றுள்ளதாகவும் இதன்போது குறித்த மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த மூவரின் சடலங்களும் பிரேத மற்றும் மரண விசாரணைகளுக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வன்னாத்தவில்லு பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.