ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்காக இத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தகுதிபெறும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய விசேட இலத்திரனியல் அட்டையொன்று வழங்கப்படுமெனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி உதவி பெறுவோர், சமுர்த்தி உதவி கிடைக்கப் பெறாதோர், நிலையான தொழில் இல்லாதவர்கள், பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள், தொழில் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த அங்கவீனமுற்றோர், விதவைக் குடும்பங்கள், நிலையான வருமானம் இல்லாத முதியோர்கள் மற்றும் கடுமையான நோயாளிகள் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்திற்கு தகுதிப் பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது உணவு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சீனி, தேயிலை, அரிசி, மா, பருப்பு, கடலை, வெங்காயம், மிளகாய், கருவாடு, கிழங்கு மற்றும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உண்வுப்பொருட்களை சதோச கூட்டுறவு விற்பனை வலையமைப்பு மற்றும் குறிப்பாக கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட, அனுமதியளிக்கப்பட்ட விற்பனை நிலையங்களின் ஊடாக உணவுப் பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை தெரிவு செய்யப்படும் குறைந்த வசதிகளைக் கொண்ட கிராமிய விற்பனை நிலையங்களுக்கு நிவாரண அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த விற்பனை நிலையங்களை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள், குறைந்த வருமானம் பெறும் வீட்டுத் தொகுதிகள், கிராமிய பகுதிகள் மற்றும் பெருந்தோட்டத் துறையை உள்ளடக்கும் வகையிலும் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இதன்மூலம் சிறியளவிலான வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.