திருமணமான சில வாரத்தில் உயிரிழந்த இளம்பெண்… அனுபவித்த கொடுமை தான் என்ன?

மும்பையில் திருமணமான சில வாரங்களிலேயே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகே உள்ள பாந்துப் பகுதியைச் சேர்ந்தவர் மணிஷா ஷெல்கே. இவர் பிரபல நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் சாய் பிரசாத் வசந்த் என்பவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது பேசிய வரதட்சணை அனைத்தும் கொடுத்த பின்பும் மணிஷாவை வரதட்சணைக் கேட்டு கணவர் மற்றும் அவரது பெற்றோர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

தான் சந்திக்கும் கொடுமைகளை மணிஷா தனது தாய், தந்தையுடன் கூறியதுடன், நாளுக்கு நாள் நிலை மிகவும் மோசமானதால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் மணிஷாவின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளனர். மணிஷாவின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்பட்ட பெற்றோர் கவலையுடனும், கண்ணீருடனும் இருந்துள்ளனர்.

பெற்றோரின் கவலை, கணவன் வீட்டில் ஏற்பட்ட கொடுமை தாங்க முடியாமல் தனது அறையில் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மணிஷா.

மணிஷாவை மீட்டு பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்பு வழக்கு பதிவு செய்த பொலிசார், மணிஷாவின் அறையில் கடிதம் ஒன்றினைக் கைப்பற்றியுள்ளனர். அதில் தனது மரணத்திற்கு கணவன் மற்றும் அவரது பெற்றோர் தான் காரணம் என்று எழுதியதையடுத்து, தற்போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு அழைத்து பிரச்சினையை சரிசெய்துவிடலாம் என்று எண்ணிய பெற்றோர், மணிஷாவின் முடிவினைப் பார்த்து பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.