மட்டக்களப்பில் மரணமடைந்த மருத்துவபீட மாணவன்! நடப்பது என்ன?

மலையகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து இப்பொழுதான் உயர்தர விஞ்ஞானதுறையான கணிதப்பிரிவு,உயிரியல் பிரிவு டொக்டர்கள், இஞ்சினியர்கள், சட்டத்தரணிகள் என உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள் .

இப்படி அவர்கள் உருவாக பெற்றோர் மற்றும் பாடசாலை சமுகம் கடும் சிரமத்தின் மத்தியில்தான் அவர்களை உயர்தரம் சித்தியடைய வைக்கின்றார்கள்,

இத்தனை தடைகளை தாண்டி எமது பகுதியிலுள்ள வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் அமைந்துள்ள தமிழர் செறிந்த நகராக உள்ள மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் கல்விகற்று வந்த மாணவன் மோகன்ராஜ், எதிர்கால ஒரு சத்திரசிகிச்சை நிபுணரோ அல்லது மகப்பேற்று நிபுணரோ வருவான் என ஆசையுடன் பல எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமது மலையக உறவுகளுக்கு கிடைத்தது அம் மாணவனின் மரணச் செய்திதான்.

மட்டக்களப்பு என்றாலே வாவியினால் சூழப்பட்ட இயற்கை வனப்புமிக்க கேரளா போன்ற இடம் என பலரும் பெருமை பேச… இன்று அந்த வாவிகளே பல சடலங்கள் ஒதுங்கும் இடமாக மாறியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இம்மாணவன் உயிரிழப்பு தற்கொலையா???அல்லது கொலையா???என எந்த ஒரு நம்பகமான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

ஒருவேளை இது தற்கொலையாகயிருப்பின் வெளிமாவட்டம் அதிலும் பலமைல் தூரம் கடந்து வாழும் எமது தமிழரான மலையக இளைஞர் இங்கு தற்கொலை செய்ய காரணம் யாது?

வெளியில் இருந்து வந்து தங்கி வாழும் பல்கலைகழக மாணவர்களுக்கும் வீட்டிலிருந்து செல்பவர்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது .

வாடகைவீட்டில் வாழும் மாணவர்களுக்கு விருப்பமான உணவு ,அரவணைப்பு கிடைக்காது. இந்த மனஎழுச்சி சூழலில் தாம் கற்கும் இடத்தில் எழும் பிரச்சினைகள் அதிக மன உளச்சலை கொடுக்கும். இந்த உளைச்சல் காரணமாகவே அவர்கள் தற்கொலைகளை தேர்வு செய்கின்றார்கள்.

இப்படியான நேரங்களில் பெற்றோர்களுக்கு தெரியப்போறதில்லை தமது மகன் பெரும் மனஉளச்சலில் உள்ளான் என்பது. அவர்களை பொறுத்தவரை தமது மகன் பல்கலைகழகத்தில் படிக்கின்றான் என்பதே.

இந்த காலங்களில் சகபீட மாணவர்கள் தமது நண்பனின் மனநிலை ஓரளவு புரிந்திருக்கும் . அவன் தனிமைப்படுறானா? அல்லது பீடத்தில் ஏதும் பிரச்சினையா? என்பது போன்றவற்றினை ஓரளவு தெரிந்திருப்பார்கள் .

இந்த நேரங்களில் வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் வெளியூர் நண்பர்கள் அடைந்து கிடப்பதை தவிர்க்க வைத்து தமது வீட்டிற்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு குடும்பத்தில் ஒருவர் போன்ற மனநிலையையும் கொடுக்கும் போது, தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை முடிவுகள் ஓரளவு பிற்போட,முயற்சிப்பார்கள்.

நுவரேலியாவை சேர்ந்த சின்னத்தம்பி மோகன்ராஜ் எனும் மருத்துவபீட மாணவன் ,கண்டி பூண்டுலோயா சேர்ந்த பொறியில்பீட மாணவன் துர்கேஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு சேர்ந்த மாணவன் தாழங்குடா கல்வியற்கல்லூரியில் தற்கொலை செய்த போன்ற சம்பவங்கள் போன்று இனியும் இடம்பெறாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

எனவே வெளியூரில் இருந்து கனவுகளோடு வந்த மாணவர்களுக்கு தேவையான உதவி ஒத்தாசைகளை புரிந்து அவர்களுக்கு மன ஆறுதல்களை கொடுத்து இன்னுமொரு உயிரிழப்பு எமது பகுதியில் ஏற்படாமலிருக்க சகநண்பர்கள் தயவு செய்து துணை புரியுங்கள்.