தமிழுக்கு முதலிடமா? சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர்! விமல் காட்டம்

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் சிங்கள மொழிக்குத்தான் முதலிடம் வழங்க முடியும், எந்த காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதையும் மீறித் தமிழுக்கு முதலிடம் வழங்க சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழி பெயர் பலகையைத் திறந்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்தப் பலகையில் முதலில் இருந்த தமிழ்மொழி எழுத்துக்களை மாற்றி முதலில் சிங்களத்தில் எழுதப்பட வேண்டும் என பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதனையடுத்து தமிழில் முதலில் எழுதப்பட்ட மும்மொழிப் பெயர்ப்பலகை மாற்றப்பட்டு, தற்போது சிங்களத்தில் முதலில் எழுதப்பட்ட மும்மொழிப் பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இது தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்ற நினைப்பை தமிழ் மக்கள் மறக்க வேண்டும். வடக்கு, கிழக்கு உள்ளடங்கிய இந்த இலங்கை நாடு சிங்கள பௌத்த நாடு. இங்கு சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் தான் முதலிடம் வழங்க முடியும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றின் பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழியே முதலிடத்தில் இருக்க வேண்டும். இரண்டாவது இடமே தமிழ் மொழிக்கு வழங்க முடியும்.

சிங்களவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். இதைத் தமிழர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள். அதனால் தமிழ் மொழிக்கு எப்படி முதலிடம் வழங்க முடியும்?

எந்தக் காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது. அதையும் மீறி தமிழுக்கு முதலிடம் வழங்க சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர்.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளினால் தான் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ராஜபக்ச ஆட்சியில் சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் தான் முதலிடம் வழங்கப்படும். அதற்காக தமிழர்களை நாம் புறக்கணிக்கின்றோம் என்று எவரும் கருதக்கூடாது.

அவர்கள் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள். அவர்களையும் அரவணைத்து கொண்டு எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.