வேலூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நிவேதினி (14). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பறை மேசையில் திடீரென மாணவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவியின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், தங்களது மகள் வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமைதிக்கப்பட்டுள்ளதாக பள்ளியில் இருந்து தகவல் சொன்னார்கள் இதை கேட்டு பதறிபோய் நாங்கள். மேல்சிகிச்சைக்காக வேலூர் கொண்டு சென்றோம்.
அங்கு மருத்துவர்கள் மகள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மகள் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்’ என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், மாணவி மயங்கி விழுந்த காட்சி பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.