யாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொடூரம்! மனைவி பலி: பட்டதாரி உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி – கண்டாவளை, மயில்வாகனபுரம் கிராமத்தில் 25 வயதான இளம் மனைவியின் கழுத்தையறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவன், மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்த பின் மனைவியின் உறவினரான யுவதியொருவரையும் வெட்டிய பின்னர் தானும் கழுத்தை வெட்டி கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவத்தில் மனைவியான சுகந்தன் சகுந்தலா (வயது 25) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை சகுந்தலாவின் உறவினரான யுவதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் அரச நியமனம் பெற்ற பட்டதாரி என தெரியவருகிறது.

அத்துடன் தற்கொலைக்கு முயற்சித்த கணவரும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களாக கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் அண்மையில் பல்கலைக்கழக மாணவியான தனது மனைவியை, இராணுவ சிப்பாயான கனவர் கழுத்தையறுத்து கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.