மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் கழுத்தை நோக்கிப் பாய்ந்த மீனொன்று அச்சிறுவனின் கழுத்தை ஊடுருவிய சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது.
முஹ் இதுல் எனும் 16 வயதான சிறுவன் மீன் பிடிக்க சென்றபோது, மீனொன்று அச்சிறுவனை நோக்கிப் பாய்ந்தது. அந்த மீனின் வாய் கூர்மையாக இருந்ததால் அம்மீன் சிறுவனின் கழுத்தில் குத்தி, கழுத்தின் மறுபக்கம் சென்றது.
இந்த மீன் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் தண்ணீரிலிருந்து வெளியே பாயக்கூடியதாகும்.
படுகாயமடைந்த இச்சிறுவனை அவனது பெற்றோர் சுலாவெசி நகரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அச்சிறுவன் மக்காசர் நகரிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அங்கு இரண்டு மயக்க மருந்து நிபுணர்களும், சுமார் இரண்டு மணி நேரம் போராடி, சிறுவனின் கழுத்திலிருந்து மீனை அகற்றினர்.
கழுத்தில் மிக முக்கியமான இரத்தக்குழாய் ஒன்று செல்வதால் அதை சேதப்படுத்திவிடாமல் மிகக் கவனமாக அந்த மீனை அகற்ற வேண்டியிருந்திருக்கிறது. அச்சிறுவன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.