யாழில் மனைவியின் சடலத்தை கொடுக்காததால் கணவர் தற்கொலை முயற்சி!

யாழ் தெல்லிப்பளையில் இறந்த தன் மனைவியின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்காமல் பெண்ணின் தாயாரிடம் ஒப்படைத்தமையினால் கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நேற்று மாலை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பூநகரியில் வசித்துவந்த மனைவிக்கு கடந்த சில நாட்களாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துததனால் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கடந்த 10 நாட்களாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 34 வயதான ராஜ்குமார் கோமாளி என்பவராவர்.

நான்கு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் உயிரிழந்ததை அடுத்து அவரது கணவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பூநகரியில் இருந்து கணவர் மனைவியின் சடலத்தை வாங்குவதற்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு இன்று மாலை சென்றுள்ளார்.

அப்போது உயிரிழந்த பெண்ணின் தாயார் அவரது சடலத்தை பொறுப்பேற்று தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்த குறித்த குடும்பத்தலைவர் வைத்தியசாலைக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மண்ணெண்ணெய் கேனுடன் தான் தீக்குளிக்கப் போவதாக அங்கு அவலக்குரல் ஏற்படுத்திக் கொண்டிருந்தமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது.

எனினும் இடத்தில் நின்ற இளைஞர்கள் மற்றும் மக்கள் அந்த நபரை சமாதானப் படுத்தியதுடன் மானிப்பாய் பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த குடும்பத் தலைவரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த குறித்த குடும்பப் பெண் தனது மரண வாக்குமூலத்தில் தனது கணவன் அடித்தமையினால் ஏற்பட்ட கண்டல் காயத்தினாலேயே புற்றுநோய் வந்ததாகவும்,தான் இறந்த பின்னர் தனது சடலத்தை தாயாரிடம் கொடுக்குமாறும் கூறியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.