பேருந்து நிறுத்தத்தில் இளைஞரின் தலை உடல்வேறு தலைவேறாக துண்டிக்கப்பட்ட கொடூரம்!

இராமநாதபுரத்தில், வாலிபர் ஒருவர் தலைவேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்டு இருவேறு இடங்களில் வீசிச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே, எஸ்.கீரந்தை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் மணி (எ) மணிகண்டன் (25). இவரை, சிலர் கொடூரமாக கொலை செய்து, தலை மட்டும் துண்டிக்கப்பட்டு, அரியமங்கலம் பஸ் ஸ்டாப்பில், மர்ம கும்பல் வீசிச் சென்றுள்ளது.

மணிகண்டன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், மணிகண்டன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். மணிகண்டனின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு, கோவிலாங்குளம் உள்ள அரியமங்கலம் பஸ் ஸ்டாப் பகுதியிலும், உடலை சாயல்குடி அருகே உள்ள இருவேலி பகுதியிலும் கொலையாளிகள் வீசிச் சென்றுள்ளனர்.

இன்று காலை பேருந்து நிறுத்தத்துக்கு வந்த பயிணிகள், துண்டிக்கப்பட்ட தலையைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாயல்குடி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெரி, பெருநாழி இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், மணிகண்டனின் துண்டிக்கப்பட்ட உடல் மற்றும் தலையைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான மணிகண்டன் மீது கொலை வழக்குகள் உள்ள நிலையில், முன் விரோதம் காரணமாக நடத்தப்பட்ட கொலையா? அல்லது வேறுது ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர் அருகே ரவுடி பாலாஜியின் தலை துண்டிக்கப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் வீசிச் செல்லப்பட்டது. அதே பாணியில் ராமநாதபுரம், சாயல்குடியில் ரவுடி மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.