யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜாசிங்க தெரிவித்ததாவது…
கோரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரதும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதில் இவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள், இலங்கையில் தங்கியிருக்கும் இடங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதற்கான ஆவணங்கள் சீன மொழியில் இல்லாததனால், சீன மொழியிலான ஆவணங்கள், படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயங்களை திரட்டுவதன் மூலம் சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு தொற்றுநோய் தடுப்பு மருத்துவர்களை கடமையில் ஈடுபடுத்தி அவர்கள் பிரிசோதிக்கப்படவுள்ளார்கள்.
இதேபோன்று விமானங்களுக்கு சிறப்பு காணொலிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விமான பயணிகளுக்கு கோரோனா வைரஸ் தொடர்பில் தெளிவைப் ஏற்படுத்த முடியும்.
இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கப்பல் மூலம் இலங்கைக்கு வரும் பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தற்பொழுது புதிய கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையை பொரளையில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ள முடியும். இதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய கோரோனா வைரஸ் தொடர்பில் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய மருத்துவ பரிசோதனை ஆற்றல் இலங்கை மற்றும் இந்தியாவின் புனே மாநிலத்தில் மாத்திரமே உள்ளன.
இதேபோன்று அனைத்து மாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் புதிய கோரோனா வைரஸ் தொடர்பில் சிறப்பு ஆலோசனைகள் அடங்கிய சுற்றறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது – என்றார்.
நாட்டில் கொழும்பு உள்ளிட்ட அண்டிய பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் முகத்தை மறைப்பதற்காக பயன்படுத்தப்படும் முக மூடிகளை (Masks) பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்த சுகாதார பணிப்பாளர், இவற்றை தயாரிக்கும் 3 நிறுவனங்களுக்கு தமது தயாரிப்புக்களை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.