யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்! ஒருவர் பலி…12 பேர் வைத்தியசாலையில்

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் இறைச்சி உண்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் யாழ் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் 35 வயதான மகாதேவன் சிகேந்தினி என்பவரே உயிரிழந்தவாராவர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கோண்டாவில் வடக்கு பகுதியில் கடந்த 29 ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்று இடம்பெற்றபோது அங்கு கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விருந்தில் கலந்துகொண்டவர்களில் உணவை உண்ட சிலருக்கு திடீரென வயிற்றோட்டம் மற்றும் வாந்திபேதி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தனியார் வைத்தியசாலைக்கு சென்று அவர்கள் சிகிச்சை பெற்றதுடன் அது தொடர்பாக அப்பகுதி பொதுச்சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதை அடுத்து சுகாதாரப்பிரிவினர் 30 ஆம் திகதி காலை அப்பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது ஒரு வீட்டில் 4 பேர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் உடனடியாக யாழ் போதனாவைத்தியசாலைக்கு பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்துடன் அப்பகுதியில் இருந்த ஏனையவர்களும் வயிற்றோட்டம் காரணமாக பாதிக்கபட்ட நிலையில், மேற்குறிப்பட்ட பெண்ணும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் நேற்று உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 12 பேர் தொடர்ந்தும் யாழ் போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக சுகாதார பரிசோதகரிடம் கேட்ட போது சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதில், இருவகையான இறைச்சியை உண்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணம் இன்னும் எமக்கு அறிவிக்கப்படவில்லை எனக்கூறிய அவர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.