வீட்டு வாசலில் கோலம் போட்ட மகள்!.. தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த பரிதாபம்

தமிழ்நாட்டில் வீட்டு வாசலில் கோலம் போட்ட மகள் தாய் கண்முன்னே விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ உத்தரவீதியை சேர்ந்தவர்கள் மாதவன்- சொர்ணலட்சுமி, இவர்களது மகள் தீபரேகா(வயது 8).

வெளிநாட்டில் மாதவன் வேலை செய்வதால், சொர்ணலட்சுமி, தீபரேகாவும் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை இருவரும் எழுந்து வீட்டு வேலைகளை செய்துள்ளனர்.

வாசலில் தண்ணீர் தெளித்து தீபரேகா கோலம் போட்டுள்ளார், மகள் கோலம் போடும் அழகை ஓரமாக நின்று சொர்ணலட்சுமி ரசித்துக் கொண்டிருக்க அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார் தீபரேகா மீது மோதிவிட்டு சென்றது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சொர்ணலட்சுமி கதற, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக தீபரேகாவை மருத்துவமனையில் சேர்த்தனர், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் கார் ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பெண்ணை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.