யாழ்.அச்சுவேலியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற 5 வயதுச் சிறுமி அட்சயா

யாழ்ப்பாணம் – அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றின் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 5 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடிப் பார்த்த பொழுது பாதுகாப்பற்ற கிணற்றில் சிறுமி விழுந்து கிடந்துள்ளார்.

எனினும் உறவினர்கள் குறித்த சிறுமியை மீட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போது சிறுமியை பரிசோதித்த வைத்தியர் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் .

இவ்வாறு உயிரிழந்தவர் ஜெகதீஸ்வரன் அட்சயா வயது 5 என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுமி ஏற்கனவே கடந்த மழைக்காலத்தின் போது கிணற்றில் விழுந்த நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் சிறுமி மீண்டும் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அச்சுவேலி வல்லை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.