நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு

நுவரெலியாவிலுள்ள விருந்தகமொன்றின் அறையிலிருந்து சீன நாட்டு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய டாய்குயின் என்ற சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது சுற்றுலாவிற்காக நுவரெலியாவிற்கு சென்றுள்ளதாகவும், அவருடன் சென்ற ஏனைய 3 பெண்கள் வேறு ஒரு அறையிலும், சடலமாக மீட்கப்பட்ட பெண் தனியாக ஒரு அறையிலும் நித்திரை செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனிமையில் நித்திரை செய்த பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மரண விசாரணைக்காக நுவரெலியா நீதிவான் வரவழைக்கபட்டு சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை இலங்கைக்கு வரவழைத்து சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு