பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் மூன்று முக்கிய தீர்மானம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெறு கின்ற பகிடிவதை மற்றும் தொலைப்பேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிகாரிகள் குழு இன்று கூடி மிக முக்கியமான 3 தீர்மானங்களை எடுத்துள்ளது.

அந்தவகையில் மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகஸ்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல்,

மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ்அப் தகவல்கள், அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் பிரிவு (Sri Lankan Police Cyber crime unit) ஊடாக விசாரணை நடத்தல்,

மற்றும் மாணவர் ஒன்றியம் உடனடியாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்தல் ஆகிய முக்கிய 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

குறித்த முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகஸ்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், மூத்த மாணவ ஆலோசகர்கள், மாணவர் நலச் சேவைகள் உதவிப்பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இன்று முற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ்பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி மூன்று தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் அமைக்கப்பட்ட குழு, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கிளிநொச்சி வளாகத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுக்கப் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பிலும் அங்கு மாணவிகளுக்கு தொலைப்பேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றமை தொடர்பிலும் ஜனாதிபதி மட்டத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், கிளிநொச்சி வளாக விடுதிக்காப்பாளர் உள்ளிட்டோருக்கு மாணவிகளோ அவர்களது பெற்றோரோ முறைப்பாடு வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன்,யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஊக்கங்களை வழங்குவதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் . சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

அவர் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்துக்குச் சென்று இது தொடர்பில் நேரில் ஆராய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ் பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.