ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வியப்படையச் செய்த கோட்டாபய

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள டெங்கு ஒழிப்பு திட்ட ஊழியர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களை, ஜனாதிபதி இன்று சந்தித்துள்ளார்.

இதன்போது ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

போராட்டங்கள் காரணமாக ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படும் செயற்பாடுகளை நிறுத்தும் முகமாகவே ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டத்திற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முற்பட்ட காலங்களில் ஜனாதிபதி செயலக முன்றலுக்கு வருகை தரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆனால் தற்போது எந்ததொரு தடையுமின்றி அவ்விடத்திற்கு அவர்கள் வருகை தந்து, போராட்டத்தில் ஈடுபடக்கூடிய புதியதொரு சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே இன்றைய தினம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திந்து, கலந்துரையாடியுள்ளார்.

மேலும் புதிதாக ஜனாதிபதியாக பதவியேற்று குறுகிய காலத்தில், நாட்டு மக்களின் அவசியமான தேவைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்