யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி! சிறுமி உட்பட ஒருவர் கைது

யாழ்ப்பாணம் நல்லூரடியில் இயங்கி வந்த திருமண மண்டபம் ஒன்றின் வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ்ப்பாணம் பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரான சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அந்த சிறுமியின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்தியவரும் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுடன் இணைந்து விடுதியும் இயங்கி வந்துள்ளது.

எனினும் அந்த விடுதி பதிவு செய்யப்படவில்லை. அந்த விடுதியில் கலாசார சீரழிவு நடவடிக்கை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் அந்த விடுதியை இன்று பிற்பகல் சுற்றிவளைத்தனர்.

அங்கு தங்கியிருந்த வெள்ளைக்கடற்கரையைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரும் அவரது கணவர் எனத் தெரிவித்த ஒருவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஒரே இடத்தைச் சேர்ந்த போதும் பெண் திருமண வயதையடையாதால், அவர்கள் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த விடுதியில் வைத்து அந்த சிறுமி மூலம் அதிகளவு பணத்தை ஆண் பெற்றுவந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை பதிவு செய்யப்படாத விடுதிகளை இயங்க அனுமதித்துள்ளமையே இவ்வாறான கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ் மாநகர சபை தனது அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகளைச் செய்யாமல் அரசியல் நடத்தினால் இப்படியான கலாசார சீரழிவு நடவடிக்கைகளை தடுக்க முடியாது போகும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.