விபத்தில் மாணவி மரணம்…. ‘லிப்ட்’ தந்தவர் தற்கொலை..!

நாகை அருகே பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் பிளஸ் 1 மாணவி உயிரிழந்த நிலையில், மன உளைச்சலால் அவரது உறவினரும் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. நாகை அடுத்த வேளாங்கண்ணி, பூக்காரத் தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகள் மகரஜோதி(16).

இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நாள்தோறும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பள்ளி வாகனத்தை தவறவிட்டதால் அவரது உறவினர் வீரமணி(35) என்பவருடன், பைக்கில் பள்ளிக்கு சென்றார்.

பரவை கிராமம் அருகே சென்றபோது, வேதாரண்யத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்து, பைக் மீது மோதியது. இந்த விபத்தில் மகரஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, லேசான காயத்துடன் தப்பிய வீரமணி, மாணவி இறப்புக்கு காரணமாகி விட்டோம் என்ற மன உளைச்சலில் இருந்தார்.

இதனால் யாரும் இல்லாத நேரத்தில் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரே நாளில் மாணவி உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.