யாழ் மாவட்டத்திற்கு மீண்டும் இப்படி ஒருவர் கிடைப்பாரா?

யாழ் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் , அரச சேவையிலிருந்து ஓய்வுபெறுவதையடுத்து அவருக்கு சேவை நலன் பாராட்டு விழா இன்று நடத்தப்பட்டது.

இந்த விழா யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் நா. வேதநாயகன் அவர்கள் தமது பாரியாருடன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் செயலாளராக கடமையாற்றிய நா. வேதநாயகன் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வும் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவையில் சிறப்புத் தரத்தைக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன், போரின் போது கிளிநொச்சி மாவட்ட செயலாளராகக் கடமையாற்றியதுடன், இறுதிப் போரின் பின்னர் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்மாவட்டத்தின் அரசாங்க அதிபரான வேதநாயகன் அவர்கள் இன்று ஓய்வு பெற்றுள்ளமையானது யாழ் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் கவலையினை தோற்றுவித்துள்ளது.

ஏனெனில் இன்னும் மூன்று மாதங்களில் அவர் ஓய்வு பெறவேண்டிய நிலையில் அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக அவர் தான் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

திரு வேதநாயகன் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாகவே யாழ் மாவட்டத்தில் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் பெருமளவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர் யாருக்குமே அஞ்சாத ஓர் நேர்மையாளன். ஆதலினால்தான் வேதநாயகன் அவர்கள் மன்னாரில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய போது ரிக்ஷாத்தின் அடாவடிகளுக்கு அஞ்சாது மக்களுக்கு சேவையாற்றினார். எனினும் ரிக்ஷாத் கொடுத்த தொடர்தொல்லைகளைனால் அவர் முல்லைத்தீவுக்கு இடமாற்றலாகி சென்றார்.

இதுவரை காலமும் அவர் பதவியில் இருந்தபோது அரசாங்க சொத்துக்களையோ அல்லது மக்களின் சொத்துக்களையோ சுவீகரித்தவர் அல்ல. மிகவும் நேர்மையாளராக திரு வேதநாயகன் அவர்கள் இருந்ததனால் தான் இன்று சுயநலம் பிடித்த சில அரசியல்வாதிகளால் அவர் பந்தாடப்படுகின்ற நிலையில் தனது சேவைக்காலம் இன்னும் மூன்று மாதங்களில் நிறைவடைய உள்ளபோதும் அவர் தனது ஓய்வுக்காலத்தினை அறிவித்துள்ளார்.

யாழ்மாவட்டம் நீண்டகாலத்தின் பின்னர் பெற்றெடுத்த தவப்புதல்வன் திரு வேதநாயகம் அவர்கள். அவர் ஓய்வு பெறுகின்றமை யாழ்மாவட்ட மக்களின் மனங்களில் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களின் மத்தியிலும் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

திரு வேதநாயகன் அவர்கள் சிறந்ததொரு பண்பாளர், மக்கள் நலனொன்றே தமது சேவை என நினைத்து மக்களுக்காகவே பணியாற்றியவர். யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் அவர் சேவையாற்றிய அத்தனை இடங்களிலுமே மக்களுக்கான பணியினை செவ்வனே செய்து முடித்தவர்.

இந்நிலையில் யாழ் மாவட்டத்திற்கு மீண்டும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா? என்பதே தற்பொழுது சமூகஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.