18,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவர்- கல்வி அமைச்சர்

பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்காக 54 ஆயிரம் அரச துறை பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“சௌபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரச தீர்மானித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களில் 18 ஆயிரம் நியமனங்கள் ஆசிரியர் நியமனங்களாகும்.

உள்வாரி வெளிவாரி பட்டதாரிகள் என கருத்திற் கொள்ளாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.