யாழ்.சென். பொஸ்கோவின் தரம் ஒன்றின் பிரிவு நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலைக்கு மாற்றம்

யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2020ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினரை நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையுடன் இணைத்து தனிப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையுடன் இணைக்கப்படும் இந்த பிரிவை யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியால நிருவாகமே நிருவகிக்கவுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய நடைமுறை வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் 2020ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு 5 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2020ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்கள் நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.

நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையில் தரம் ஒன்றுக்கு அதிதிறன் வகுப்பறை (Smart Class Room) அமைக்கப்பட்டே இந்த சிறப்புப் பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. அத்துடன், அந்த வகுப்புக்கான நிருவாகத்தை புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய நிருவாகமே முன்னெடுக்கவுள்ளது.

நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையை முன்னேற்றும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.