கோர விபத்து; தந்தை, மகன் உயிரிழப்பு; இருவர் படுகாயம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதி, சந்திவெளியில், மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிப் பயணித்த ஓட்டோவும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில், இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான், காளி கோவில் வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய ரங்கன் ராமசாமியும் அவருடைய மகனான 41 வயதுடைய ராமசாமி விஜயபாஸ்கர், ஆகிய இருவருமே பலியாகியுள்ளார். சடலங்கள் , சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய இருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள ஏறாவூர் பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.