மகா சிவராத்திரி நாளில் தப்பி தவறியும் அன்னதானம் கொடுத்து விடாதீர்கள்! ஏன் தெரியுமா?

மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும், அன்னதானப் பிரியர்கள் பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன.

நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து சம்பாதிக்கிறோம்.

ஆனால், அந்த சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறையனாருக்காக நாள் முழுக்க கண்விழித்து விரதம் இருப்பது தான் இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.

மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.

மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். இதைத்தான் நம்முடைய முன்னோர்களும் செய்து வந்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம்
சிவராத்திரி நாளன்று அனைத்து சிவன் கோவில்களிலும், அன்னதானம் கொடுக்கிறேன் பேர்வழி என்று அநேகம் பேர், கேசரி, சாம்பார் சாதம், காய்கறி சாதம், தயிர் சாதம் என வரிசை கட்டி நின்று கொடை வள்ளலாக மாறி வாரி வழங்கி வருகின்றனர்.

அன்னதானம் தான் இருப்பதிலேயே மிக உயரிய தானம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை எதற்கு எப்போது கொடுப்பது என்ற ஒரு நியதி உண்டு. அப்படி செய்தால் தான், அன்னதானம் கொடுப்பவருக்கும், அதைப் பெறுபவருக்கும் உரிய பலனைக் கொடுக்கும்.

நம்முடைய ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது உணவும் உறக்கமும் தான். இந்த இரண்டையும் கட்டுப்படுத்தினாலே, ஐம்புலன்களும் தானாகவே கட்டுக்குள் வந்துவிடும். அப்படி கட்டுப்படும் போது, நம் மனதிற்குள் இறையுணர்வு தானாகவே வந்துவிடும். அப்போது நாம் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும். இதைத் தான் சிவராத்திரி விரதம் நமக்கு எடுத்துரைக்கின்றது.

அதனால் தான் கோவிலுக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க செல்லும்போது, அமைதியாக வந்து தரிசித்து அமைதியாக வெளியேற வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். எனவே, இனியாவது சிவராத்திரி தினத்தில் அன்னதானம் கொடுப்பதை தவிர்த்து விரதமிருப்பவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையாகும்.