யாழ் பல்கலைக்கழகத்திற்கு கோட்டாபய அரசின் அதிரடி நியமனம்! பேராசிரியர்கள் ஏமாற்றத்தில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு சிங்கள இனத்தைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் மூவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மையினமான முஸ்லிம் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இடம்பெறவில்லை.

சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரிதிநிதிகள் தலா ஒருவர் நியமிக்கவேண்டும் என பேராசிரியர்கள் இருவரும் மருத்துவ வல்லுநர் ஒருவரும் இணைந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அவர்களது கடிதத்தில் மருத்துவத் துறை சார்ந்த ஒருவரும் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ள சேர் பொன்னம்பலம் இராமநாதன் நிதியத்திலிருந்தும் ஒருவரும் நியமிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் அவை கருத்திற் கொள்ளப்படாது சிங்கள மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர்கள் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான தத்துவவியல் பேராசிரியர் மகிந்த ரூபசிங்க, தொல்லியல் முதுகலை நிறுவனத்தின் பேராசிரியர் ஜெகத் வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவ விஞ்ஞான பீட சமூக மருத்துவத் துறை முதுநிலை பேராசிரியர் குமுது விஜேயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு வெளிவாரியாக 17 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக செயற்படுத்தும் திட்டம் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வழமையான நடைமுறை மாற்றப் பட்டு புதிய திடீர் நியமனம் இடம் பெற்றுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் குறிப்பிட்டார்.