ரணிலுக்கு கடும் நெருக்கடி! தலைமை பதவியில் நீடிப்பதில் சிக்கல்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்சியின் தலைமைப்பதவியிலிருக்கும் பிரதமர் ரணில் அந்த பதவியினை, சபாநாயகர் கருஜயசூரிய அல்லது அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்குமாறு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.தே.கவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கொழும்பில் இன்று சந்தித்துப் பேசியிருந்த நிலையில், கட்சியின் தலைமை பதவியை கருஜயசூரியவிடம் கையளிக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகியுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரதமர் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பேசியிருந்ததாக பிரதமருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்துள்ளன.