பிரபல பாடசாலையொன்றிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவர்கள் பதுளை,ஆளிஎல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா வந்துள்ள நிலையிலேயே குறித்த அனர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த குளத்தில் நீராடிய ஒன்பது மாணவர்களில் நான்கு பேரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவர்களின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.