வெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி? கொழும்பு ஊடகம் தகவல்

தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்து ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் இரண்டு தடவைகள் சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.